தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடை முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் 5-வது தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால், அப்பகுதியில் சென்று வரும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டாஸ்மாக் கடை முன்பு நேற்று காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு நகரக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாநகரச் செயலாளர் எம்.
எஸ்.
முத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன்ராஜ், மணவாளன் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது, இப்பிரச்சனை தொடர்பாக வரும் 27-ஆம் தேதி உதவி ஆட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி உரியத் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர்.
கருத்துக்கள்