News & Ad contact: 75025 54555
ரயில் மீது கல்லெறிந்தால் 10 ஆண்டுகள் சிறை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை :
ரயில்கள் மீது கல் வீசும் சட்டவிரோதச் செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், இதனைத் தடுக்கத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியான சட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓடும் ரயில் மீது கல் வீசுவது என்பது வெறும் குறும்புத்தனம் அல்ல; அது பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் கொடூரமான குற்றமாகும்.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே பாயும் கற்கள், கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பயணிகளுக்குப் பாரிய காயங்களையும், சில நேரங்களில் நிரந்தர உடல் ஊனத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், இத்தகைய செயல்களைக் கரும்புள்ளியாகக் கருதி இரும்புக்கரம் கொண்டு அடக்க ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) முடிவு செய்துள்ளது.
ரயில்வே சட்டம் 1989, பிரிவு 152-ன் படி, ரயில்கள் மீது கல்லெறிந்து பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், பிரிவு 154-ன் கீழ் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக ரயில்கள் மெதுவாகச் செல்லும் இடங்கள் மற்றும் தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நவீனக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடமாடினாலோ அல்லது அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தாலோ, பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"பொதுச் சொத்தான ரயிலைப் பாதுகாப்பதும், சக பயணிகளின் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" எனத் தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கருணையின்றிச் சட்ட நடவடிக்கை பாயும் என்பது மட்டும் உறுதி.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-